போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படித்து பார்க்காமலே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரியில் போரை துவங்கியது. நேட்டோ எனப்படும் சர்வதேச நாடுகளின் ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது. இது தன் இறையாண்மைக்கு எதிரான செயல் என கூறி ரஷ்யா போரில் இறங்கியது. நான்கு ஆண்டுகளை நெருங்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தவும் அவர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,” நாங்கள் ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொடர்ந்து பேசி வருகிறோம். எனினும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படித்து பார்க்காமலேயே எதிர்ப்பது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. உக்ரைனை காட்டிலும் ரஷ்யா அமைதி ஒப்பந்த பரிந்துரைகளுக்கு நல்ல வரவேற்பு அளிப்பது தெரிகிறது. உக்ரைன் மக்களும் எங்களது முயற்சிக்கு ஆதரவாக உள்ளனர்” என்றார்.


