மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மூலம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொகுதியில் 4 மடங்கு அதிக வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி நவம்பர் 4-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது..
அதன்படி, பாஜக மாநில தலைவரும், மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள், அதாவது, நந்திகிராமை விட 4 மடங்கு அதிக வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வசம் உள்ள சௌரிங்கியில் 74,553 வாக்குகளும், கொல்கத்தா துறைமுக தொகுதியில் 63,730 வாக்குகளும் அதிகபட்சமாக நீக்கப்பட்டுள்ளன. திரிணமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,16,047 வாக்குகளுடன் நீக்கப்பட்டுள்ளன. இறப்புகள், வாக்காளர்கள் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்தல் மற்றும் போலி வாக்குகள் இருப்பது போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


