பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள பரத்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஹூமாயூன் கபீர். திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர்,
முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்டப்படும் என்று அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.
இதனால் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஹூமாயூன் கபீர் அறிவித்துள்ளார். அத்துடன் இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்கி அனைத்து தொகுதியிலும் தன் கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்தார். மேலும், மேற்கு வங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மசூதி கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படுவதை உறுதி செய்வோம்” என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு இந்து அமைப்பினரால் இடித்து தள்ளப்பட்டது. தற்போது அங்கு 1,800 கோடி ரூபாய் செலவில் பால ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.


