ஒரே நாளில் இண்டிகோவின் 1,000 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாலும், பிற விமானங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாலும் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தினமும் நாடு முழுவதும் 2,200 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விமானிகளின் பணி நேர வரம்பு (எப்டிடிஎல்) குறித்து கடந்த மாதம் திருத்தப்பட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஒரு விமானி 18 மணி நேரம் பறக்கலாம் என்ற விதி 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது. வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாயம் விடுமுறை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய விதிகள் விதிக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றாத விமான நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன் இந்த புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா, ஆகாசா, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் இந்த காலத்தை பயன்படுத்தி கூடுதல் விமானிகள், பணியாளர்களை நியமித்தன. ஆனால், இண்டிகோ நிறுவனம் கால அவகாசம் வழங்கியும் கூடுதல் ஆட்களை நியமிக்கவில்லை. புதிய விதிகளை அமல்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டும் அதை இண்டிகோ நிறுவனம் பயன்படுத்தாமல் குறைவான விமானிகள், பணியாளர்களுடன் சேவையை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், டிசம்பர் 1-ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்தது. போதிய விமானிகள் இல்லாத காரணத்தால் இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவை பல ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்த பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் கடும் அவதியடைந்தனர். டிசம்பர் 10 முதல் 15-ம் தேதிக்குள் விமான சேவை மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் என்று இண்டிகோ செயல் தலைவர் தெரிவித்துள்ளார்.
இண்டிகோவின் விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டதாலும், பிற விமான நிறுவனங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தப்பட்டதாலும், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்கள் இலக்குகளைப் பிடிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களை நாடும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


