சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள தர்மசாலாவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் மார்க்ரம் 61 ரன்கள் குவித்தார்.பந்து வீச்சில் இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இதுவரை 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,939 ரன்களும் அடித்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். இதற்கு முன் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ஹர்திக் பாண்டியா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


