தனியார் மதுபான பாரை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ்காரர் கையை கடித்த தவெக தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசு பள்ளிக்கு அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான பார் இயங்கி வருகிறது. இதனை அகற்ற வலியுறுத்தி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சுற்றி போலீஸார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
அப்போது பலரும் கேட் மீது ஏறிகுதித்து மனமகிழ் மன்றம் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது தடுத்து நிறுத்திய போலீஸ்காரர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், போலீஸ்காரரின் கையைக் கடித்த தவெக தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், காவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட விவகாரத்தில் தவெகவினர் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


