
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் ஈரோடு பகுதியில் அதிமுக பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தவிர்ந்து வந்தார். கடந்த 1-ம் தேதி கோபி அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன், தனது முடிவை செப்.5-ம் தேதி (இன்று) அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் செங்கோட்டையன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். அவர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினார். இதன்பின் அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்ணாவின் தொண்டராக, மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.
மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர் நல்ல திட்டங்களை இயற்றி இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை நடத்தினார். கோவையில் நடந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதால் என்னை மனதார எம்.ஜி.ஆர் பாராட்டினார். கோபிசெட்டிபாளையத்திற்கு பதில் சத்தியமங்கலத்தில் போட்டியிட எம்.ஜி.ஆர் கூறினார்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா வழங்கினார். ஆன்மீகவாதிகள் மட்டுமின்றி திராவிட தலைவர்களும் ஏற்றுக்கொண்ட தலைமையாக ஜெயலலிதா இருந்தார். தன்னை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை ஜெயலலிதா அரவணைத்தார்.
அவர்மறைவுக்குப் பிறகு, அதிமுகவிற்கு பல்வேறு சோதனைகள் வந்தன. அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை பொதுச்செயலாளராக ஒருமனதாக நியமித்தோம். இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதாலேயே நான் அமைதியாக இருந்தேன். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரை முதலமைச்சராக சசிகலா முன்மொழிந்தார்.
கடந்த 2017 ஆட்சியில் அமர்ந்தபிறகு 2019, 2021, 2024 தேர்தல்களை சந்திக்கும்போது களத்தில் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டது. 2024-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் வேலுமணிகூட இதை ஒருமுறை வெளிப்படுத்தினார்.அதன்பின் பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம். வெளியே சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
ஆனால், இந்த கருத்தை எடப்பாடி பழனிசாமிஏற்க மறுக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.