என் மீது 17 வழக்குகள் இருப்பதாகவும், உடனடியாக கைது செய்யப்போவதாகவும் தொலைபேசியின் மூலம் காவல்துறை அதிகாரி என்று மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி சண்முகம் புகார் அளித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், ஐ.டி ஊழியர்கள், அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அரசியல்வாதிகளையும் தொடர்பு கொண்டு உங்கள் மீது வழக்கு உள்ளதால் கைது செய்யப்போகிறோம் என்று டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்களில் ஈடுபட்டு சிலர் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று மிரட்டப்பட்டுள்ளார். அப்படி மிரட்டியவர்கள் உண்மையான போலீஸாரா என்பதற்கான அடையாளத்தைக் கேட்டதற்காக அவர்கள் தமிழில் தன்னை திட்டி, மிரட்டியதாக சி.வி.சண்மும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,” காலையில் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் போது ஒரு போன் அழைப்பு வந்தது. அழைப்பாளர் ஆங்கிலத்தில் பேசி, தன்னை மும்பையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் என்னை ஒரு தீவிரவாதி என்றார். பின்னர் உடனடியாக என்னைக் கைது செய்யப் போவதாக மிரட்டினார்.
பின்னர் அந்த அழைப்பு மூத்த போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. இந்த இரண்டாவது அழைப்பாளர் மிரட்டல்களைத் தொடர்ந்தார். என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாகக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த மாதிரியான சம்பவம் நடக்கும்போது, சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.சண்முகத்திற்கு வந்த செல்போன் அழைப்பு எண்ணை, அவரது உதவியாளர் ட்ரூ காலரில் ஆய்வு செய்த போது, பி.கே.சி காவல்நிலையம், மும்பை என்ற பெயரில் பதிவாகியிருந்தது. மீண்டும் அந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்ட போது யாரும் அழைப்பை ஏற்கவில்லை. இந்த மிரட்டல் சம்பந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சருக்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல் சம்பவம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


