
இந்தியா, பாகிஸ்தான் சண்டையின் போது 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் குறிவைத்து தாக்கி அழித்தன. இதற்கு பாகிஸ்தான் ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே சண்டை மூண்டது. இதனால் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால், இச்சண்டை, சிலநாட்களில் முடிவு பெற்றதாக திடீரென அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை என் முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் கொரிய குடியரசு தலைவருடனான இருதரப்பு சந்திப்பின் போது இந்தியா- பாகிஸ்தான் சண்டை குறித்து மீண்டும் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், உலகின் பல போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இந்தியா- பாகிஸ்தான் இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்கும். நான் போர்களை எல்லாம் நிறுத்தி விட்டேன். இந்தியா, பாகிஸ்தான் மோதல் ஒரு பெரிய போராக மாறியிருக்கும். ஏற்கெனவே 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. அத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், நீங்கள் எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? இப்படி நீங்கள் சண்டையிட்டுக் கொண்டால், உங்களுடன் எவ்வித வர்த்தகமும் மேற்கொள்ள மாட்டோம். உங்களுக்கு 24 மணி நேர அவகாசம்அளிக்கப்படுகிறது. அதற்குள் முடித்துக் கொள்ளவும் என்றோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இருநாடுகள் இடையிலான சண்டையில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். தற்போது அதன் எண்ணிக்கையை 7 என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் ஐந்தா, ஏழா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.