
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக, தமிழ்நாட்டிற்கென பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் குழு 2022-ல் அமைக்கப்பட்டது. பெற்றோர், துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து, கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வடிவமைத்தனர். மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1-ம் தேதி தமிழக அரசிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார் அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது. தொடர்ச்சியான திறன் அடிப்படையிலான அகமதிப்பீடுகள் மூலம் பாடப்பொருள் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் கல்விசார் ஆயத்தநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மாணவர்கள் 11-ம் வகுப்பில் பயிலும் ஆண்டினை அவர்களை ஆயத்தப்படுத்தும் மற்றும் மாற்றத்துக்கு உள்ளாக்கும் ஆண்டாகக் கருத்தில்கொள்ள வேண்டும்.
இந்த அணுகுமுறை தேர்வு சார்ந்த மன இறுக்கத்தைக் குறைக்க உதவுவதோடு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பாகத் தயாராவதை உறுதி செய்து, அவர்கள் பாடக்கருத்துகளை ஆழ்ந்து புரிந்துகொள்ள ஊக்கப்படுத்தும். மேலும், இது மேல்நிலை வகுப்புகளில், சமநிலையான, மாணவர் நேய மதிப்பீட்டு அமைப்பினையும் மேம்படுத்தும். மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, பாடக் கருத்துகளைப் புரிந்து கொண்டமை, பெற்ற அறிவினை புதிய சூழல்களில் பயன்படுத்துதல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை மதிப்பிடும் வகையில் பொதுத் தேர்வுகளை சீரமைக்க வேண்டும்.
வாய்மொழித் தேர்வுகள், செயல்முறைத் தேர்வுகள், குழுச் செயல்பாடுகள், செயல்திட்டப் பணிகள் போன்ற பலதரப்பட்ட கூறுகளை கொண்டதாக மதிப்பீட்டு முறைகளை மாற்றியமைக்க வேண்டும். கல்வித் தரநிலைகளைப் பேணும் அதே நேரம் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பொதுத் தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.