
திருவெறும்பூரில் பிளஸ் 2 மாணவி பள்ளிச்சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி மூக்கையன், இவரது மனைவி ராஜேஸ்வரி துப்புரவுப் பணியாளர். இவர்களது மகள் கனிஷ்கா(17) பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று காலை கனிஷ்காவின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். கனிஷ்கா பள்ளிச்சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டில், தாயின் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். வெகுநேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது கனிஷ்கா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கனிஷ்காவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கனிஷ்காவின் தந்தை மூக்கையன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிளஸ் 2 மாணவியான கனிஷ்கா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு கிளம்ப இருந்த பிளஸ் 2 மாணவி திடீரென தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது