ஏவிஎம் நிறுவனத்துக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமானார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் சரவணன் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
ஏவிஎம் சரவணன் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ் திரையுலகின் பாதையை தீர்மானித்து உருவாக்கியதில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானித்ததில் சரவணன் பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும், திரைத்துறை ஆளுமையாகவும் ‘அப்பச்சி’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை ஏவிஎம்க்குப் புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’, தலைவர் கலைஞரின் ‘பராசக்தி’, முரசொலி மாறனின் ‘குலதெய்வம்’ என ஏவிஎம் நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவிஎம்.சரவணன்.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏவிஎம்மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவிஎம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


