தவறான தகவல்களைப் பரப்பும் சமூக ஊடக தளங்கள் மற்றும் டீப் ஃபேக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை விவாதத்தின் போது மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ” அரசியலமைப்பு சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு இணங்க விரும்பாத சில அமைப்புகள் தவறான தகவல்களை பரப்ப சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த, சமீபத்தில் புதிய விதிகள் அறிமுகப் படுத்தப்பட்டன. டீப் ஃபேக் எனும் செயற்கை நுண்ணறிவு (AI) குற்றங்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது.
போலி செய்திகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. தவறான தகவல்களைப் பரப்பும் சமூக ஊடக தளங்கள் மற்றும் டீப் ஃபேக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கடும் சட்டங்களை உருவாக்குவதும், புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வருவது தற்போது அவசர தேவையாகும். எந்தவொரு தொலைக்காட்சி சேனல் அல்லது எந்த செய்தித்தாளுக்கும் எதிராக வரும் எந்தவொரு புகாரையும் மத்திய அரசும், இந்திய பத்திரிகை கவுன்சிலும் மிகவும் தீவிரமாகக் கவனித்து வருகின்றன.
இது நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமான ஒன்று. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தவறான நோக்கத்துடன் வெளியிடப்படும் பதிவுகளை தீவிரமாக எதிர்க்க வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதும் வலுப்படுத்துவதும் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஆகும். போலிச் செய்திகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து எடுப்போம்” என்றார்.


