September 10, 2026

திடீர் நிலச்சரிவு: கரையில் நின்ற படகுகள் நீரில் மூழ்கி 12 பேர் பலி

பெரு நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் ஆற்றுப்படுகையில் நிறுத்தப்பட்டிருந்த 2 படகுகள் நீரில் மூழ்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் உகாயாலி பகுதி அமேசான் ஆற்றுப்படுகையில் படகுத்துறையில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது கரையில் நிறுததப்பட்டிருந்த இரண்டு படகுகள் நீரில் முழ்கின.

மூழ்கிய படகுகளில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் அதில் ஒரு படகில் சுமார் 50 பேர் இருந்ததாக தேசிய அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. படகுகள் நீரில் மூழ்கியதில்  3 குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை உயிரிழந்தவர்களில் 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளன. முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆற்றில் பாயும் நீரின் வேகம் மற்றும் நீர் சுழற்சி காரணமாக மீட்பு பணி மிகவும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may have missed