‘தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கணும்’ என்று தவெக தலைவர் விஜய்யை சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று(டிசம்பர் 20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” களத்தில் இருப்பவர்கள் பற்றி பேசுவோம். களத்தில் யார் இருக்கிறார்? கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி தொகுதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் நிற்காமல் போனது ஏன்? ஈரோட்டில் வந்து நிற்க வேண்டியது தானே? திமுகவும், நாம் தமிழர் கட்சி மட்டும் தானே போட்டியிட்டன? இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக கூட வரவில்லை. அதிமுக வரவில்லை. களத்திற்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது.
ஈரோடு கடப்பாரை என தவெக தலைவர் விஜய் யாரைச் சொல்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? ஈரோடு கடப்பாரை துருப்பிடிச்சு, பழைய இரும்புக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்கியாச்சு. இப்பதான் தெரிய வருது, அப்போ தெரியலையா தீய சக்தினு? என் தம்பி விஜய்க்கு ஒரே ஒரு எதிரி தான். ஆனால், எனக்கு நான்கு எதிரிங்க. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகன்னு நான்கு பேரோட நான் மல்லுக்கட்டுறேன். தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கணும், ஆனால். களத்துல நாங்க யாருன்னு இந்த நாலு பேருக்கும் நல்லாவே தெரியும்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மறைந்த தலைவர்களின் பெயரைச் சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்? கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்பது நாங்கள் மட்டும் தான். நான்கரை வருடமாக சும்மா இருந்து விட்டு, அடுத்த தேர்தல் வரும்போது எஸ்ஐஆரை கையில் எடுப்பது ஏன்? நீங்கள் வென்ற பிஹாரில் எல்லாம் கள்ள ஓட்டே இல்லையா?
களையெடுக்கப் போறேன் என்று சொல்லி, மொத்த நிலத்தையும் உழுதுவிட்ட கதையாக உள்ளது. ஒரு கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம் என்பது சாதாரண பிழை திருத்தம் அல்ல, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். தேர்தல் நெருங்கும் நேரத்தில், குறுகிய காலத்தில் மீண்டும் எப்படி 1 கோடி பேரை சேர்ப்பீர்கள்? வாக்காளர்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்த காலம் போய், இன்று ஆட்சியாளர்கள் வாக்காளர்களைத் தேர்வு செய்யும் அவலம்” என்றார்.


