
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகியுள்ளது. அத்துடன் மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கும் வேலையிலும் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு அவர்களின் மீன்கள், படகுகள், வலைகள் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கிறது.
இலங்கை கடற்படை பிடித்த தமிழக மீனவர்களை விடுவிப்பதுடன், அவர்களின் படகுகளையும் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறிகைது செய்த இலங்கை கடற்படை, ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது.கடந்த சில நாட்களாக தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.