
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 2:04 மணிக்கு 102 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. கைபர் பக்துன்க்வாவின் பெஷாவர், ஸ்வாட், மலாகண்ட், நவ்ஷேரா, சர்சத்தா, கரக், திர், மர்தான், முகமது, ஷாங்க்லா, ஹங்கு, ஸ்வாபி, ஹரிபூர் மற்றும் அபோட்டாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், அட்டோக், டாக்ஸிலா, முர்ரி, சியால்கோட், குஜ்ரான்வாலா, குஜராத், ஷேக்குபுரா, ஃபெரோஸ்வாலா, முரிட்கே மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்பு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர்.