
தனது காதலன் உதவியோடு கணவனைக் கொலை செய்து வீட்டிற்குள் இளம்பெண் புதைத்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நலாசோபராவில் 15 நாட்களுக்கு முன்பு இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. நலாசோபரா கிழக்கு கங்காடிபாடா பகுதியில் உள்ள சாய் நலச்சங்கத்தைச் சேர்ந்த இளம்பெண்,தன் காதலனுடன் சேர்ந்து அவரது கணவரை கொலை செய்துள்ளார். இந்த கொலையை மறைப்பதற்காக கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்துள்ளார். அந்த இடத்தில் கணவரின் சகோதரரை அழைத்து டைல்ஸ் பதிக்கச் சொல்லியுள்ளார். இதை அறியாத அவரும் தனது சகோதரர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் டைல்ஸ் பதித்துள்ளார்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்டவர் காணாமல் போனது குறித்து போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக பெல்ஹார் காவல் துறையினர் விசாரணையைத் துவக்கினர். இந்த நிலையில், கொலை செய்த பெண், அவரது காதலனுடன் தலைமறைவானார். இதனால் மோப்பநாய் உதவியுடன் அவரது வீட்டில் புதைக்கப்பட்ட உடலை போலீஸார் தோண்டி எடுத்துள்ளனர். மேலும், தடவியல் குழுவினர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். தலைமறைவாகியுள்ள இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.