அரசு விழாவில் பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் டாக்டர் நுஸ்ரத் பர்வீன் அரசு வேலையை ஏற்க மறுத்துள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
பிஹாரில் அரசுத் திட்டத்தின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ் டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் டாக்டர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இழுத்துப் பார்த்தார். இதற்கு ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்தில் இது தொடர்பாக பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சரால் ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் டாக்டர் நுஸ்ரத் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இம்மாதம் 20-ம் தேதி அவருக்கு பணியில் சேர நியமனக் கடிதம் கிடைத்துள்ளது. ஆனால், அவர் பணியில் சேரவில்லை என்றும் அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஹிஜாப் கழற்றப்பட்ட அவமானத்தின் சுமை காரணமாக அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் தெரிவித்தார். மேலும் பணியில் சேர வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து நிர்பந்திக்கப்படுவதாவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


