
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யாருக்கும் தெரியாமல் நடந்து வந்த மிகப்பெரிய டீசல் திருட்டு மோசடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்ட இருவருமே உறவினர்கள் ஆவார்கள். மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றிய இவர்கள், சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய் வழியாக டீசலை திருடியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டீசல் திருட்டில் ஈடுபட்ட இருவரும், முதலில் ஜெய்ப்பூரின் பக்ரு பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள தஹ்மி கலன் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். வெளியில் இருந்து பார்க்கும்போது, அந்த இடம் சிறிய அளவிலான மினரல் வாட்டர் பாட்டில் உற்பத்தி செய்யும் ஆலை போல் தோன்றியது. ஆனால், உண்மையில் அங்கு ஒரு மிகப்பெரிய திருட்டு நடவடிக்கை நிலப்பரப்பிற்கு அடியில் நடந்து கொண்டிருந்தது.
இந்த கும்பல், சுமார் 25 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தடி குழாயை அடைய, தாங்கள் வாடகை எடுத்துள்ள வீட்டின் உள்ளே இருந்து ஒரு சுரங்கப் பாதையைத் தோண்டினர். பின்னர் பெட்ரோல் எடுத்துச் செல்லும் அந்த குழாயை உடைத்து, அதில் ஒரு வால்வை பொருத்தி, சட்டவிரோதமாக டீசலை உறிஞ்சத் தொடங்கினர். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க மினரல் வாட்டர் வியாபாரம் என்ற பெயரில் இந்த நடவடிக்கை மறைக்கப்பட்டது.