தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. கேரளா போக்குவரத்துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்ட அந்த பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் நடுவழியிலேயே இறக்கிவிடப்பட்டு கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்
அத்துடன் சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்துத்துறை 70 லட்ச ரூபாய்க்கும் மேல் அபராதம் விதித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கிடையேயான நீண்டநாள் நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த நிகழ்வை தொடர்ந்து நேற்று முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து பாதிப்படையும். மேலும் தமிழகத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த விஷயத்தில் உடனடியாக தமிழக அரசும், கேரளா அரசும் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


