கேரளாவில் உள்ள சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோயிலிலும் 31 பவுன் தங்கம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், சபரிமலையில் ஐயப்பன் கோயில் சன்னிதான முகப்பில் தங்கமுலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசங்களை புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுன் தங்கம் அபகரிக்கப்பட்டது.இந்த விவகாரம் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோயிலில் 100 பவுன் தங்கம் மாயமானது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள், இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை கோயிலைப் போலவே, வைக்கத்தில் உள்ள ஒரு கோயிலிலும் நகை மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டயம் மாவட்டம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோயிலில் காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பிரோக்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பதிவேட்டில் 3,247.900 கிராம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், 2020-2021-ம் ஆண்டு தணிக்கை அறிக்கை கடந்த ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், 2,992.070 கிராம் தங்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 255 கிராம் தங்கம் (முப்பத்தியொன்றரை பவுன்) மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தானம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் தணிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் சபரிமலையை தொடர்ந்து வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோயிலிலும் நகை மாயமான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் பக்தர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


