மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோ.புதூர் அருகே சம்பக்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவருடைய மனைவி வழக்கறிஞர் கிருத்திகா. இந்த தம்பதியரின் மகன் யுவன் (15). மேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்ற யுவன், , தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தயாராகி வந்தார்.
கடந்த சில நாட்களாக பெற்றோருடன் பேசாமல் இருந்துள்ளார். சிவகங்கையில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு அவரது பெற்றோர் நேற்று சென்றுள்ளனர். அதனால் யுவன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை பயன்படுத்தி தன் நெற்றியில் சுட்டு யுவன் தற்கொலை செய்து கொண்டார்.
கோயிலுக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பிய பெற்றோர், தங்களது மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோ.புதூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். யுவனின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யுவன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


