தனது இரட்டை குழந்தைகளை தலையணை அழுத்தி கொலை செய்த தாய், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பாலாநகரின் பத்மாநகர் காலனியைச் சேர்ந்தவர் சாய் லட்சுமி(27). இவருக்கும் மென்பொருள் ஊழியரான அனில்குமாருக்கும் ஆகஸ்ட் 2022-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சேதன் கார்த்திகேயா, லஸ்யதா வள்ளி என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு அடிக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சாய்லட்சுமி விரக்தி மற்றும் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிகாலை 4 மணியளவில் அருகில் படுத்திருந்த தனது இரட்டை குழந்தைகளையும் தலையணை கொண்டு அழுத்தி கொலை செய்தவர், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடந்த போது அவரது கணவர் அனில்குமார் வேலைக்கு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.
நான்காவது மாடியில் இருந்து சாய் லட்சுமி குதித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, அவர் ரத்த வெள்ளத்தில் தெருவில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்குள் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது சாய் லட்சுமியின் மகனும், மகளும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மூன்று உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


