கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடந்த மாதம் 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வுகள் அந்த குழந்தைகள் இறப்புக்கு கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பும் காரணமாக கூறப்பட்டது. மேலும் உயிரிழந்த குழந்தைகளுக்கு நடந்த உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் டிஎதிலேனே கிளைகோல் எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பு சம்பவங்களுக்கு இருமல் சிரப்புகளில் பிரேக் ஆயில் கரைப்பான் கலந்ததே காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 11 குழந்தைகளின் உயிரிழப்பைக் கவனத்தில் கொண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது என்று என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பு தயாரிக்கும் ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பர்மா என்ற மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் நடத்திய ஆய்வில், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் அதகளவில் டைஎதிலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோல்ட் ரிஃப் இருமல் மருந்து தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.


