
கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பதை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.