
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவது, கூட்டணியை வலுப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது உள்ளிட்டவைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, தமிழ்நாட்டில் பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன், எல் முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார். மேலும், அவர் கூறுகையில், ” தமிழக பாஜக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம். கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது” என்று வலியுறுத்தினார்.
இந்த பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.