
ஆசிரியராக பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
மத்திய மாநில அரசுகளால் ஆண்டு தோறும் டெட் ( Teachers Eligibility Test) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் தகுதி பெறுவோர் மட்டுமே ஆசிரியர் பணியில் சேர முடியும். இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று இன்று தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியைத் தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபன்கர் தத்தா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயமாக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா என்று விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.