
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில் சீனாவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். இந்த மாநாட்டின் இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து மோடி உரையாடினார். குறிப்பாக, நேபாள பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், மியான்மரின் மூத்த ராணுவ அதிகாரி மின் ஆங் லையிங், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் டோகாயேவ் உள்ளிட்ட தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் மாநாட்டிக்கு இடையே ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடினர். அப்போது இந்தியா – சீனா- ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு குறித்தும், உறவு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
இந்த சூழலில், ரஷ்யா, இந்தியா, சீனா தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய புதினை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.