
பிஹாரில் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்று தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும். அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு எனக்குற்றம் சாட்டினார். பிஹார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் படடியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் தேர்தல் ஆணையம் சர்ச்சைகளில் சிக்கியது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார, தங்கள் நிலைபாடு குறித்து விளக்கிப் பேசினார். எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அரசியலமைப்பை அவமானப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மேலும் தேர்தலின் போது அமைதியாக இருந்து விட்டு தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதாக அவர் கூறினார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பதில் அளிப்பதற்கு பதிலாக கூடுதல் கேள்விகளை எழுப்பியுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் “இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3. Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4. பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
5. 01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?
7. “நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் – வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?”
என்று பதிவிட்டுள்ளார்.