
தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வை ரத்து செய்து மறுதேர்வை தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டவற்றுடன் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை கட்சியின் மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ” மத்திய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம். ஆகஸ்ட் 10, 2025 அன்று நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே. ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்” என்று கூறியுள்ளார்.