எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாளான டிச.24-ம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ‘பாரத் ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவு நாளான 24.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.


