ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நாளை (டிச.18) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரையாண்டு தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் வேகம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் நாளை (டிச.18) ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த கூட்டத்தில் விஜய் பேசுவதற்கு காலை 11 மணி முதல் 1 மணி வரை போலீஸாரால் நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தவெக தொண்டர்கள்10,000 பேர், பொதுமக்கள் 25,000 பேர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்- கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கூட்டத்தையொட்டி 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் அருகே பிரபல தனியார் பள்ளி உள்ளது. நடிகர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் காரணமாக அந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் அந்த பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்ல முடியுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் அந்த பள்ளிக்கு மட்டும் நாளை (டிச.18) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால், நாளை நடக்க இருந்த தேர்வு டிச.26-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


