தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்து கொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை மோடியும், பாஜகவினரும் நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிஹாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை முன்னிட்டு பிஹாரில் பிரசாரத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒடிசா – பிஹார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பாஜக,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.


