பருவகால நிலையை அறிய 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக முன்னாள் நிதியமைச்சர் கூறிய டெக்னிக்கல் மெஷின்கள் எங்கே என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி என்பது ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. குடியுரிமை சட்டம் சிறுபான்மையினரை வெளியேற்றும் சட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், எந்த சிறுபான்மையினரும் வெளியேற்றப்படவில்லை. அதேபோல வாக்காளர் சரிபார்ப்பு குறித்தும் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அதற்கு காரணம் திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது.
ஜூன் மாதம் 6.30 லட்சம் ஏக்கர் பயிர் நடப்பட்டு செப்.,5 ஆம் தேதி அறுவடை செய்வது குறித்து தமிழக முதலமைச்சருக்கு முன்னதாகவே தெரியும். அப்படி தெரிந்திருந்தும் அவர், 60 சதவீதம் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. 40 சதவீதம் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பருவமழை திடீரென்று வந்ததாக கூறுகிறார்.
மேலும் தமிழ்நாடு முன்னாள் நிதியமைச்சர் தியாகராஜன் சட்டமன்றத்தில், பருவகால நிலையை அறிந்து கொள்ள ரூ.10 கோடிக்கு டெக்னிக்கல் மெஷின் வாங்கியதாக தெரிவித்தார். ரூ.10 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்ட அந்த மெஷின்கள் எங்கே? அப்படியென்றால் அப்போதைய நிதியமைச்சர் கூறியது பொய்யா? இல்லை வேளாண்துறை அமைச்சர் சொல்வது பொய்யா” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


