
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில், செப்டம்பர் 20-ம் தேதி வரை, இடி, மின்னலுடன், மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
மேலும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், அரியலுார், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை(செப்டம்பர் 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், மணிக்கு, 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.