
பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகனான பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17- ம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கைக்குழு சுமத்தியது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. அதன்பிறகு, அவருக்கு இரண்டாவது தடவையாக, செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீசிற்கு விளக்கம் தரவில்லை.
இந்த நிலையில், பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார். அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என தெரிவித்துள்ள ராமதாஸ், அன்புமணி உடன் உள்ளவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்க தயார் எனவும் அறிவித்துள்ளார். தனி அணியைப் போல செயல்பட்டு வந்த அன்புமணி தனிகட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.