
தமிழக டிஜிபி அலுவலக வாசலில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளை கத்தியால் தாக்கியதாக கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக வாசலில் ஏர்போர்ட் மூர்த்தியை ஓட ஓட விரட்டி சிலர் தாக்கினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தடுத்த போதும், இந்த தாக்குதல் நடந்தது. அப்போது ஏர்போர்ட் தன்னை தாக்கியவர்களை மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் எங்கள் கட்சியினர் மீது ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் டிஜிபி அலுவலக வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீஸார் கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்திக்கு உடல்நலன் குன்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரத்த அழுத்தத்தில் ஏற்பாடு மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.