
பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்களை தவறாக விமர்சனம் செய்ததாக சட்டமேலவை உறுப்பினரும், தனது மகளுமான கவிதாவை சஸ்பெண்ட் செய்வதாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரசேகர ராவ். இவரது மகள் கவிதா தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். சந்திரசேகர ராவ் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட காலவேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தின் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு சிபிஐ வசம் நேற்று ஒப்படைத்தது.
இதனையடுத்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினரும், பிஆர்எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிஆர்எஸ் ஆட்சியில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ், முறைகேடுகள் மூலமாக சொத்துகள் குவித்தாகவும், தற்போதைய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து சந்திரசேகர ராவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் பிஆர்எஸ் மூத்த நிர்வாகியும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சந்தோஷ் குமாரும் தனது தந்தை சந்திரசேகர ராவிற்கு எதிராக செயல்படுவதாக அடுக்கடுக்காக புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் தனது மகள் கவிதாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை செய்வதாக சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருப்பதால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.