
மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலையடுத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். இதில், உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்துகள் மற்றும் டூவீலர்களில் பல்கலைக்கழகத்துக்கு வந்து செல்கின்றனர். டூவீலர்களை நிறுத்த பல்கலைக்கழக நுழைவாயில் அருகே பார்க்கிங் வசதி உள்ளது.
இந்நிலையில் வரலாற்று துறை முதலாம் ஆண்டு படிக்கும் லட்சுமி நாராயணன் (18) நேற்று தனது வாகனத்தை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகே எடுத்து சென்றுள்ளார். அப்போது வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், பல்கலைக்கழக வளாகத்திற்குள் டூவீலர்களில் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.