
தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நேற்று நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மைப்பணியாளர்களுக்கான புதிய திட்டங்களைப் பட்டியலிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி, தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு, தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள், பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம். இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு” என்று பதிவிட்டுள்ளார்.