
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், தற்போதைய மகாராஷ்டிராவின் ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், ஆக.20-ல் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கல் செய்ய ஆக.21 கடைசி நாளாகும்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடைபெற்றது. இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளரை தேர்வு செய்ய முழு அதிகாரத்தை கார்கேவிடம் வழங்கப்பட்டது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி என காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்தார். சுதர்சன் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.