சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த மூன்று சிறுவர்கள் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதிக்கு சென்றுள்ளனர். இவர்களில் 16 வயதான இருவர் மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுடன் அதே பகுதியில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த மாணவர் பேஸ்புக் மூலம் நண்பராகியுள்ளார். நண்பர்கள் மூன்று பேரும் இரவு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அவர்களுடன் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதான கோகுல் என்பவரும் சேர்ந்துள்ளார். போதை தலைக்கேறியதும் மூன்று சிறுவர்களுக்கும் – கோகுலுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கோகுலை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளைஞரை குத்தியும், முகத்தை சிதைத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை தரையில் கிடத்தி வீடியோ எடுத்து கூச்சலிட்டு ஆக்ரோஷமாக கத்தியுள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு அங்கு சென்றுள்ளனர். அதை பார்த்ததும் சிறுவர்கள் தப்பியோட முயன்றனர். சுதாரித்துக் கொண்டபொதுமக்கள் சுற்றிவளைத்து இரண்டு சிறுவர்களை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களை மல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் கோகுல் மற்றும் மூன்று சிறுவர்களும் அடிக்கடி சந்தித்து மதுபோதையில் திளைத்தது தெரியவந்தது.
மேலும் இளைஞர் கோகுல் மற்ற மூன்று பேரையும் உதாசீனப்படுத்தி வேலை வாங்கி வந்துள்ளார். இதில் 16 வயது சிறுவன் சிகரெட் புகைத்தைதை அவரின் பெற்றோரிடம் போட்டுக் கொடுத்துள்ளார். இதனால் மற்ற நண்பர்களும் கோகுல் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்த சூழலில் ஒன்றாக மது அருந்தும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மூன்று சிறுவர்களை ஜாதிப் பெயரைச் சொல்லி கோகுல் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரடைந்த சிறுவர்கள் அவர்களை கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சிறுவன் உட்பட மூன்று பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிகெரெட் பிடித்ததை பெற்றோரிடம் போட்டுக் கொடுத்த இளைஞரை, மது போதையில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் ஒன்று சேர்த்து கொடூரமாக கொலை செய்து முகத்தை சிதைத்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
50க்கும் மேற்பட்ட ரகங்கள்: பண்ருட்டியில் பலா திருவிழா கோலாகலம்…
கீழக்கரை அருகே ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்…
“தமிழக அரசியல் பண்பாட்டை மீட்கும் முதல்வர் ஜோசப் விஜய்…” – மு.வீரபாண்டியன் பாராட்டு