“கார்ப்பரேட்களுக்கு சலுகை வழங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க நேரடித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா ஒரு மிகப் பெரிய பொருளாதார பேரிடரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி அண்மைக்கால அறிவிப்புகள் மிகத்தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.
மக்களை தங்கம் வாங்காதீர்கள், சமையல் எண்ணெயை குறைவாகப் பயன்படுத்துங்கள், பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள் என பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள், தேசத்தின் பொருளாதார அடித்தளம் எந்த அளவுக்கு தள்ளாடி கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா என பிரச்சாரம் செய்த மத்திய அரசு, இன்று ஒட்டுமொத்த தோல்வியையும் சாமானிய மக்கள் தலையில் சுமத்த பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை சர்வதேச சந்தையை காரணம் காட்டி கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தி வைத்திருந்த மத்திய அரசு தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
உலக அரசியல் சூழலை காரணம் காட்டி, மக்களை சிக்கனமாக இருக்க சொல்லி பிரதமர் கோரிக்கை வைப்பது அடுத்து வரப்போகும் கடுமையான விலை உயர்வுக்கு மக்களை தயார்படுத்தும் ஏமாற்று வேலையாகும்.
இதனாலேயே மோடியை எதிர்க்கட்சிகள் சாடும் நிலைக்கு மத்திய அரசு ஆளாகியுள்ளது. எனவே, மத்திய அரசு இனியும் உண்மைகளை மறைக்காமல், நாட்டின் தற்போதைய ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
கார்ப்பரேட்களுக்கு சலுகை வழங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க நேரடித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

More Stories
கோயில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு: இந்து சமய அறநிலைய துறை உத்தரவு…
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு..
ஆயுதப்படை தலைமையகத்தில் அலுவலக உதவியாளரை தாக்கிய பெண் டிஐஜி: