May 10, 2026

மகளை காதலித்த 2 வாலிபர்களை கொடூர கொன்ற தந்தை…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்த 28 வயதாகும் பிரபாகரன் லாரி ஓட்டுநராக இருந்து வந்தார். இவருக்கு குடிக்கும் பழக்கம் இருந்துள்ளாம். அத்துடன் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இவரை மது பழக்கத்திலிருந்து மீட்க குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகள் செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரபாகரன் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்பவருடைய மகளைக் காதலித்தாராம். இது சுரேஷுக்கு தெரியவந்தது. மகளை அவர் கண்டித்துள்ளார். இதுபோல் பிரபாகரனையும் கண்டித்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டைவிட்டு வெளியே சென்ற பிரபாகரன், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர், மது போதையில் பிரபாகரனும், சுரேஷ் மற்றும் அவருடைய கூட்டாளியான மதுரையைச் சேர்ந்த விக்னேஸ்வரனும் (40) சேர்ந்து கொத்தனேரி பகுதியில் தகராறு செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் குடும்பத்தினர், எம்.புதுப்பட்டி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். எனவே போலீசாரும் பிரபாகரனைத் தேடினர். சிவகாசி டிஎஸ்பி அனில் குமார், எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து பிரபாகரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

மதுபோதையில் கொத்தனேரி பகுதியில் உறங்கி கொண்டிருந்த சுரேஷ், அவரது கூட்டாளி விக்னேஸ்வரனும் போலீசாரிடம் சிக்கினர். அப்போது போலீசாரிடம் சுரேஷ் கூறும்போது, பிரபாகரன் தன் மகளைக் காதலித்து வந்ததாகவும், இதனை கண்டித்தும் அவர் காதலைத் தொடர்ந்தார். இதனால் நண்பர் விக்னேஸ்வரன் உதவியுடன் கழுத்தை அறுத்து பிரபாகரனை கொலை செய்து அதேப்பகுதியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டோம் என்று உளறி உள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மதுபோதையில் இருந்த 2 பேரையும் அழைத்துக்கொண்டு கொத்தனேரி பகுதியில் உள்ள கிணறுகளில் தேடினார்கள். அங்குள்ள கண்மாய் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிரபாகரன் உடல் மிதப்பதைக் கண்டுபிடித்தனர். சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதனிடையே சுரேஷ், விக்னேஸ்வரன் ஆகிய 2 பேருமே உச்சகட்ட போதையில் தள்ளாடியபடி எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் போலீசார் போதையில் இருந்த சமயத்தில் விசாரணை செய்யவில்லை… நீண்ட நேரம் காத்திருந்த போதை தெளிந்த பின்னர் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. சுரேஷ் மீது ஏற்கனவே கொலை, அடி-தடி, கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிவகாசி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன் (26) கொலை செய்யப்பட்டார். தன் மகளைக் காதலித்ததற்காக அந்த வாலிபரை வெட்டி கொடூரமாக சுரேஷ் கொன்றது தெரியவந்தது. இதனால் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் விருதுநகர் சிறையில் இருந்தபோதுதான், கூட்டாளியான விக்னேஸ்வரன் அறிமுகமாகி இருவரும் நண்பர்களாகி இருக்கிறார்கள். கொலை வழக்காக இருந்த போதிலும் ஒரு கட்டத்தில் ஜாமீனில் சுரேஷ் வெளியே வந்தார். அவரும் விக்னேஸ்வரனும் ஒன்றாகச் சுற்றித்திரிந்தார்கள். அப்போதுதான், தன் மகளை பிரபாகரன் காதலித்ததை அறிந்து கண்டித்ததால் அவருக்கும், சுரேஷுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தக் காதலை கைவிட மறுத்ததால் பிரபாகரனை போட்டுத்தள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்காக சுரேஷ், விக்னேஸ்வரனும் சமாதானமாக போகலாம் என்றுநம்ப வைக்கும் வகையில் பேசி பிரபாகரனைண்மாய் பகுதிக்கு வரவழைத்து மது வாங்கி கொடுத்தனர். இவர்களும் குடித்துள்ளனர். பிரபாகரன் மது போதையில் இருந்தபோது இருவரும் சேர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்து உடலைக் கிணற்றில் வீசியிருக்கிறார்கள்.. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மகளின் காதல் விவகாரத்தில் 2 வாலிபர்களை அப்பெண்ணின் தந்தை கொடூரமாகக் கொன்ற சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.