September 10, 2026

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு…

 பவானியை அடுத்த பெரியபுலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழ்நாடு அரசு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு, சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார்.

முன்னாள் துணைத்தலைவர் கதிர்வேல் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் வெங்கடாசலம், மாவட்டத் தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர் செங்கோட்டையன், பவானி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

தமிழ்நாடு அரசு ரூ.75 ஆயிரம் வரை பெற்ற பயிர் கடன்களுக்கு 100 சதவீதம் தள்ளுபடியும், அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடியும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்ததுடன், வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

உர விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, சாகுபடி செலவு அதிகரிப்பு, குடிநீருக்கு சிரமப்படும் நேரத்தில் கடனை திருப்பி செலுத்துவது இயலாத காரியம். பருவமழை பொய்த்து விட்டதால் அணைகளிலும் தண்ணீர் இருப்பு இல்லாததால் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்றாமல் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்கள் ராஜூ, ராமசாமி, சித்தோடு சி.துரைசாமி, கவுந்தப்பாடி விஜயகுமார், முன்னாள் இயக்குனர் பெருமாள் மற்றும் இச்சங்கத்தில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

You may have missed