நகைக் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து, ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை, எம்கேபி நகர், மேற்கு குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அன்குஷ் (33). அப்பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் கடையில் இருந்த தங்க நகைகளின் இருப்பை சரிபார்த்த போது, சுமார் ரூ.53 லட்சம் மதிப்புள்ள 49 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, அவர் நடத்திய விசாரணையில், கடந்த 2 மாதங்களில் ஒரே பெண் சுமார் 20 முறை கடைக்கு வந்து நகைகள் வாங்கியிருந்தது தெரிய வந்தது.
அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து நகைக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
இதில், வாடிக்கையாளர் போல் நகைகளை வாங்குவது போல நடித்துவிட்டு, சிறிய அளவிலான தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக, மீஞ்சூர், பத்மாவதி நகரைச் சேர்ந்த ரெஹானா (50) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2 மாதங்களில் சுமார் 20 முறை நகைக்கடைக்கு வந்து, ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பி சிறிய வகை தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
அவரிடமிருந்து சுமார் 24 பவுன் தங்க நகைகளை போலீஸார் மீட்டனர். மேலும், மீதமுள்ள நகைகளை மீட்கவும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ரெஹானா சிறையில் அடைக்கப்பட்டார்.

More Stories
தென் மாநிலங்களை தண்டிப்பதா? – உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்துக்கு முதல்வர் விஜய் எதிர்ப்பு…
புழல்: ரூ.1 கோடிக்கு பேரம் பேசி புழல் சிறையில் மதுரை ரவுடியை கொல்ல சதி:
சென்னை: டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகராறு; டிடிஆர்- பெண் வக்கீல் மாறிமாறி தாக்குதல்: