சென்னை:
கனடா நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் தோஷம் கழிப்பதாகக் கூறி நிர்வாண பூஜை செய்ய வைத்து, அதை வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற தென்காசியைச் சேர்ந்த கிளி ஜோதிடரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
பெசன்ட் நகர் கடற்கரையில் அறிமுகம்
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 37 வயது பெண் ஒருவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர், சென்னையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்துள்ளார். சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்த அவர், பெசன்ட் நகர் கடற்கரையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார்.
அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம் அவர் ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அந்த ஜோதிடர், அப்பெண்ணின் கடந்த கால வாழ்க்கையைத் துல்லியமாகக் கணித்துக் கூறியதாகத் தெரிகிறது. ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட அப்பெண், வியப்படைந்து ஜோதிடருக்கு ரூ.20 ஆயிரத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
வீடியோ காலில் நிர்வாண பூஜை மோசடி
இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றதும், அப்பெண்ணின் தீவிர நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி மேலும் பணம் பறிக்க ஜோதிடர் திட்டமிட்டார். “உங்களுக்குக் கடுமையான தோஷம் உள்ளது; நிர்வாண பூஜை செய்தால் மட்டுமே அது நீங்கும், அதன்பின் உங்கள் வாழ்க்கை மிகப்பெரிய உயரத்தை எட்டும்” என்று ஆசை வார்த்தைகளைக் கூறி அப்பெண்ணை நம்ப வைத்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அப்பெண், தான் தங்கியிருந்த அறையில் இருந்தபடி வாட்ஸ்-அப் வீடியோ காலில் ஜோதிடர் கூறியபடி பூஜையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பெண்ணை நிர்வாணக் கோலத்தில் வீடியோ பதிவு செய்த ஜோதிடர், பின்னர் தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார்.
மிரட்டல் மற்றும் கைது நடவடிக்கை
அந்த நிர்வாண வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அப்பெண்ணிடம் கூடுதல் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்போன் எண்ணைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியைச் சேர்ந்த கிளி ஜோதிடர் இசக்கிமுத்து என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை அதிரடியாகக் கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இசக்கிமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இதேபோன்று வேறு பெண்களையும் ஏமாற்றி இவர் மிரட்டியுள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புதிய திட்டம் தொடக்கம்!
பைக்கின் பின்னால் காதலி அமர்ந்திருந்தால் இளைஞருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்பு: மதுரை உயர்நீதிமன்றக் கிளை கருத்து