
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காளப்பட்டியில் கடந்த ஜூலை மாதம் 11 ஏக்கர் நிலம் வாங்கியதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் கோ.தேவராஜன் என்பவர் புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் நிதி மோசடியிலும் அண்ணாமலை ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தமை மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டது குறித்து விசாரணை செய்ய வேண்டும். குண்டர் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்ய வேண்டும்.
சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அண்ணாமலை மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து நடத்திட வேண்டும்” என்று கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.