சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. பொறுப்பு மேயர் குணசேகரன், ஆணையாளர் பாலு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர், “வருங்கால முதலமைச்சர் திரிஷா படத்தை வைக்க வேண்டும்” என கோஷமிட்டு கோரிக்கை வைத்தது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
காரைக்குடி மாநகராட்சியில் இன்று சாதாரண மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பெரும்பான்மை மாநகராட்சி மன்றங்களில் நடந்துவரும், முன்னாள் முதலமைச்சர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்களை வைக்கக்கோரும் அதே பிரச்சனை காரைக்குடியிலும் எழுந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நகர மன்ற உறுப்பினர், தனது பகுதியில் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்று கூறி பொறுப்பு மேயர் இருக்கைக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அதேபோல், மாநகராட்சியில் பணி ஒதுக்கப்பட்ட எந்த வேலையும் நடைபெறவில்லை என்று திமுக, காங்கிரஸ், அதிமுக கவுன்சிலர்கள் அவை தொடங்குவதற்கு முன்பாகவே கூச்சலிட்டனர்.
மன்ற கூட்ட அரங்கில் முதல்வர் விஜய் படம் மட்டும் இருந்ததால், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படம் மற்றும் மு.க ஸ்டாலின் படம் வைக்க வேண்டும் என்று இரு கட்சியினரும் கோஷங்கள் எழுப்பி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி படம் முதலில் வைக்கப்பட்டது. அதன் பின்பு மு.க. ஸ்டாலின் படமும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற 11வது வார்டு சுயேச்சை மாமன்ற உறுப்பினர், “திரிஷா படம் வைத்தே ஆகவேண்டும். வைக்கவில்லை என்றால் பெரிய கலவரம் நடக்கும். ஆட்சி மாற்றத்திற்கு காரணமே அந்த அம்மாத்தான் எனவே அவர் படத்தை வைக்க வேண்டும்” என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!